July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய அமைச்சரவை உபகுழு அனுமதி

இலங்கையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்களை செய்வதற்கு வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழு அனுமதி வழங்கியுள்ளது.

உலகச் சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடையும் நிலையிலேயே இங்கு அதன் விலைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எப்போது இருந்து இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர், இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் பெருமளவுக்கு எரிபொருள் விலை உயர்வடைந்த போதும், 21 மாதங்களாக இலங்கையில் அதன் விலைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அரசாங்கம் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் அவ்வாறான நட்டத்துடன் எரிபொருளை வழங்க முடியாது என்பதனால் விலையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.