July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எம்.பி ஆசனத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்”: அத்துரலியே ரதன தேரர்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்றும், தான் பதவி விலகவுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அபே ஜனபல கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியலில் அத்துரலியே ரதன தேரர் பாராளுமன்ற சென்றுள்ள நிலையில், ஒப்பந்தத்தின்படி அவரது 6 மாத பதவிக் காலம் ஜூலை மாதம் 5 ஆம் திகதியுடன் முடிவடைவதாக அபே ஜனபல கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஞானசார தேரரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்மொழிய நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அதுரலியே ரதன தேரர், தான் பதவி விலகவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது என்று கூறியுள்ளார்.

தான் 6 மாதத்திற்குதான் பதவியில் இருப்பேன் என எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றும், இந்த பாராளுமன்ற காலம் முழுவதும்  பதவியில் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.