
சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்போரை கைது செய்யும் அளவுக்கு அரசாங்கம் பயந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இணையவழி ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கும் போது, சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்போரைக் கைது செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் போலித் தகவல்களை கதைப்பதை காரணம் காட்டி, குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என்று தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னொரு இனக் குழு தொடர்பாக வெறுப்புப் பேச்சுக்களை வெளியிடும் போதே, கைது செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்ட ஏற்பாடுகளை மீறி கைது செய்வதாயின், அதற்கு பொலிஸார் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பாலித ரங்கே பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.