July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓய்வுபெற்ற தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைக்க பிரதமர் ஆலோசனை!

ஓய்வு பெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் சுமார் 34,000 தாதியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

தாதியர்களின் சேவை காலத்தை நீடிப்பது குறித்து பிரதமர் கேள்வி எழுப்பியதையடுத்து சேவை காலத்தை 63 ஆண்டுகள் வரை நீடிப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.

தாதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் கருத்து தெரிவித்தார்.

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பயிற்சி பெறாத தாதியர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறித்தும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதன்படி தற்போது அப்பிரிவுகளில் சேவையாற்றும் பயிற்சி பெறாத தாதியர்களை குறித்த பிரிவுகளில் சேவையாற்றும் காலத்தை பயிற்சி காலத்துடன் சேர்க்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

சுகாதார துறையில் அனைவருக்கும் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்ப உறுப்பினருக்கு 2 வது டோஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தாதியர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுக்க முறையான செயற்பாடொன்றை வகுக்குமாறும் பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்தோடு தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர், சுகாதார அமைச்சரை இதன் போது வலியுறுத்தினார்.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் சுகாதார சேவையில் ஈடுபடும் அனைவரும் இதுவரை சிறப்பாக சேவையாற்றி வருவதாக பிரதமர் இதன் போது மேலும் தெரிவித்தார்.