July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘100 நகரங்களை அழகுபடுத்த முன்னர் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்தவும்’: எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கை முகங்கொடுத்துள்ள அசாதாரண நிலையில் 100 நகரங்களை அழகுபடுத்துவதற்கு முன்னர், 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவதிலயே கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் 2000 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு அழகாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றாலும், கடந்த இரண்டு வருடங்களாக நாட்டு மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கல்விச் செயற்பாடு, விவசாயம், வேலைவாய்ப்பு, சுகாதாரத்துறை, பொருளாதாரம் போன்றன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் தேவையா? என்று சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய வளங்களை விற்பதன் மூலமும் சுற்றுச் சூழல் உள்ளிட்ட அனைத்தையும் அழிப்பதன் மூலமும் இந்த அரசாங்கம் முழு நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

220 இலட்சம் மக்களின் வாழ்க்கை பரிதாபகரமான நிலையில் இருக்கும் போது நகரங்களை அழகுபடுத்த முயற்சிப்பது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை குறித்து அரசாங்கத்திற்கு எந்தவித தெளிவும் இல்லாததையே காட்டுவதாகவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.