July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கையில் செயலகத்தை அமைக்கும் விடயத்தில் ஐநா பின்னடைவை சந்தித்துள்ளது”

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் தனியான செயலகத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஐநா பின்னடைவை சந்தித்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்த செயலகத்தை நடத்திச் செல்வதற்காக பேரவையிடம் கோரியிருந்த நிதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை குறைத்து வழங்கவே அவர்கள் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும், இது ஐநாவின் பின்னடைவையே காட்டுவதாகவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பணிகளை முன்னெடுக்கவென பேரவையின் கிளை செயலகமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆதாரங்களை சேகரித்தல், பொறுப்புக் கூறல் விடயங்களை ஆராய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 13 உறுப்பினர்களை கொண்டதாக இந்த செயலகத்தை அமைக்க தீர்மானிக்ககப்பட்டதுடன் அதற்காக நடப்பு ஆண்டிற்காக 2,856,300 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த செயலகத்திற்கான புதிய பதவிகளுக்கென புலனாய்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டிருந்தன.
ஆனால் இந்த விடயத்தில் ஐநா பின்னடைவை சந்தித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐநா தலைமையகத்தின் முழுமையான அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.