July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எக்ஸ்-பிரஸ் பேர்ல்’ கப்பல் தொடர்பில் முறையான விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

தீ விபத்துக்கு உள்ளான ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் இலங்கைக்குள் எவ்வாறு நுழைந்தது என்பது தொடர்பாக முறையான விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான அமைப்புகளும் மீனவர்கள் சிலரும் இணைந்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அடிப்படை உரிமை மனுவில் இலங்கை துறைமுக அதிகார சபை, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும், துறைமுகங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சர், சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடலுக்குள் தீ விபத்துக்கு உள்ளான கப்பலால் நாட்டில் கடல் வளங்களுக்கும், நாட்டில் சுற்றாடலுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தக் கப்பல் நாட்டுக்குள் வந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.