May 30, 2025 22:22:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனாவிலிருந்து இலங்கையை மீட்டெடுக்க அமெரிக்காவிடமிருந்து அவசர உதவிகள்

(photo : twitter/@USAIDNepal)

கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தென்கிழக்காசிய நாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கம், தமது சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனமான USAID இன் ஊடாக விமானங்களில் உதவிகளை அனுப்பியுள்ளது.

இலங்கை, இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு அவசர மருத்துவப் பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 880,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 1,200 துடிப்பு ஒக்சிமீட்டர்கள் என்பவற்றை முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் உதவும் வகையில் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த, அமெரிக்காவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருவதாகவும் இந்த உதவிகள் நாடு முழுவதும் 25 மாவட்டங்களின் மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டின் சுகாதார துறைக்கு இந்த உதவிகள் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் 11.3 மில்லியன் டொலர்களையும் மோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ள நோயாளிகளை பராமரிப்பதற்காக 200 செயற்கை சுவாச கருவிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.