July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு குறைந்தால் மாத்திரமே நாடு திறக்கப்படும்’

கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கு குறைந்தால் மாத்திரமே நாட்டை மீண்டும் திறக்க முடியும் என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் இரண்டாயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நிலைமைகளை கட்டுப்படுத்தும் வரை இருவார காலமேனும் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க நேரிடுமென சுகாதார தரப்பினர் கொவிட் -19 செயலணி பிரதானியான இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை 7 ஆம் திகதி நாடளாவிய ரீதியிலான பயண கட்டுப்பாடு தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் முழுமையான கட்டுப்பாடாக அது வெளிப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களின் செயற்பாடுகள் மோசமானதாக அமைந்துள்ளதுடன், அதிகாரிகளும் முறையாக தீர்மானம் எடுக்காது நிலைமைகளை பலவீனப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டை திறக்க முடியாது. அவ்வாறு மீண்டும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு நாடு வழமையான செயற்பாடுகளுக்காக அனுமதிக்கப்படுமாயின் அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் எனவும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் நீட்டித்து, கடந்த இரண்டு வாரகாலத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் அடுத்தகட்ட தீர்மானம் எடுக்க முடியும் என்பதை சுகாதார, வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு எதிர்வரும் வாரத்தில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டிய விதத்தில் பதிவாகினால் நாட்டை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாளாந்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் விட குறைவாக பதிவானால் மாத்திரமே மக்களின் செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடைமுறைப்படுத்த முடியும்.

அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயற்படவே அனுமதிக்க முடியும். இல்லையேல் மாத இறுதி வரையில் நாடு முடக்கப்பட வேண்டிவரும் என்பதையும் இராணுவ தளபதியிடம் கூறியுள்ளனர்.