July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான பில் ஜோன்சன், டேனி கே. டேவிஸ், பிரெட் ஷெர்மன், கேத்தி மெனிங் மற்றும் டெபோரா கே. ரோஸ் ஆகியோர் இணைந்து இலங்கை தொடர்பான தீர்மானமொன்றை தயாரித்து வெளியுறவுக் குழுவிடம் சமர்பித்துள்ளதுடன், அதனை தொடர்ந்து அந்தத் தீர்மானம் செனட் சபையில் அங்கீகாரத்திற்றாக சமர்பிக்க ஏற்பாடாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, அந்த தீர்மானத்தின் நோக்கங்கள் சந்தேகங்களை கொண்டவை என்று குறிப்பிட்டுள்ளது.

ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத அப்பட்டமான பொய்களைக் கொண்ட குற்றச்சாட்டுக்களைக் கொண்டுள்ள இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்ப்புக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் தவறான, பக்கச்சார்பான மற்றும் ஒருதலைப்பட்சமான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது வெறுமனே மனித உரிமை சார்ந்த தீர்மானம் அல்ல என்றும், மாறாக அமெரிக்கா உட்பட 32 நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்காக அமெரிக்கக் காங்கிரஸில் உள்ள ஒத்த கருத்துடைய தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகளாக அறியப்பட்டவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகத் தென்படுகின்றது என்றும் இலங்கை விமர்சித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது பிரதிபலிப்பை வொஷிங்டன், டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகத்தினூடாக வெளிநாட்டு விவகாரங்கள் சபை, ஆசியா தொடர்பான துணைக்குழு சபை மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.