July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொரோனாவுக்கு எதிராக போராட தேசிய அரசாங்க பொறிமுறை அவசியம்’: எதிர்க்கட்சி

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய அரசாங்க பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாயன்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம், தேசிய அரசாங்க பொறிமுறை ஒன்றுடன் வரும் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சியும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சவாலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அரசாங்கத்தின் எந்தவொரு கட்டமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு திட்டத்திற்கும் சஜித் பிரேமதாஸ ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, இதனை அரசாங்கம் கொரோனா தடுப்புக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.

இலங்கையில் ஒரு நாளைக்கு 84 ஆயிரம் தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றது. அது எந்த விதத்திலும் போதாது.

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் தடுப்பூசிகளேனும் வழங்கப்பட வேண்டும்” என்றும் மாயன்த திசாநாயக்க எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.