October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது

கொவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் (திங்கட்கிழமை) இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 வீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்.மாவட்டத்தில் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 83 கிராம அலுவலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக 11 கிராம அலுவலர் பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாம் நாளான (திங்கட்கிழமை) 10 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 6 ஆயிரத்து 72 பேர் தடுப்பூசி மருந்தை பெற்றுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட 29 கிராம அலுவலகர் பிரிவுகளில் 17 நிலையங்களில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.