October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்-19: யாழ்.மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுயதனிமையில்

யாழ் மாவட்டத்தில் இதுவரை 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுயதனிமைக்கு உப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் கூட அபாயகரமான நிலை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 லிருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளதுடன், பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும்  யாழ் மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக யாழ் மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் என வலியுறுத்தினார்.

நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர் சுய விபரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டுவதோடு, தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.