October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பியுமி ஹன்சமாலி- சந்திமால் ஜயசிங்க கைதாகி, பிணையில் விடுதலை!

அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைதாகி, 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கொழும்பில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில், அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்கவும், நடிகை பியுமி ஹன்சமாலியும் இன்று கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, கோட்டை பொலிஸாரினால் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹான தெரிவித்தார்.

நிகழ்வில் 22- 25 பேர் கலந்து கொண்டதாகவும், மீதமுள்ளவர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே, 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, குறித்த இருவர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.