July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.பல்கலைக்கழக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட உத்தரவு

(FilePhoto)

யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் 3, 4 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு சினோபார்ம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவரும் வகையில் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சகலருக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பிய கோரிக்கை நேற்று (30) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு உடனடியாக கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழக பணியாளர்களையும் குறிப்பிட்ட திகதிகளில் வந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு கேட்டு கொண்டுள்ளது.