July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஹ்ரானுக்கு அடைக்கலம் கொடுத்து உதவினார் என்ற குற்றச்சாட்டில் திருமண பதிவாளர் சி.ஐ.டி.யினரால் கைது

அடிப்படைவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர், சஹ்ரானின் அடிப்படைவாதத்துக்கு ஒத்துழைப்பு நல்கியதுடன், அவருடன் சம்பந்தப்பட்ட ஐவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவிக்கையில்;

சஹ்ரான் உள்ளிட்ட ஐவர், காத்தான்குடி அலியார் பிரதேசத்தில், 2017 ஆம் ஆண்டு மற்றுமொரு தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த குழுவினர், சஹ்ரானின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரானவர்கள் எனவும் தெரியவருகின்றது.

அதன்பின்னர், சஹ்ரான் உள்ளிட்ட ஐவரும் அங்கிருந்து தப்பியோடி, ஒலுவில் பிரதேசத்தில் குறித்த திருமண பதிவாளர் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.

அந்த ஐவருக்கும் தன்னுடைய வீட்டில் அடைக்கலம் கொடுத்து, அவர்களின் அடிப்படைவாத சிந்தனைக்கு, திருமண பதிவாளர் ஒத்துழைப்பு நல்கியுள்ளார் என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.

திருமண பதிவாளரின் வீட்டில் மறைந்திருந்த ஐவரில் இருவர் மௌலவிமார்கள், அவ்விருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சஹ்ரான் உள்ளிட்ட ஏனைய மூவரும் 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளாவர்.

கைது செய்யப்பட் திருமண பதிவாளர், மட்டக்களப்பு பயங்கரவாத செயற்பாட்டு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்புக்கு அழைத்து வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.