July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து இந்தியா அவதானமாக இருக்கிறது’

கொழும்பு ‘போர்ட் சிட்டி’ திட்டத்தின் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து இந்தியா அவதானமாக இருப்பதாக இந்திய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்ட் சிட்டி சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போர்ட் சிட்டி திட்டம் ஒரு வணிக முயற்சியெனின், அது இலங்கையின் தெரிவு என்றும் தாம் தொடர்ந்தும் இலங்கையுடன் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

போர்ட் சிட்டி சீனாவுக்குச் சொந்தமான இடம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அவதானங்கள் மேலெழுந்துள்ளது.

போர்ட் சிட்டி திட்டம் வெளிப்படைத் தன்மை, திறந்த தன்மை மற்றும் நிதி ரீதியான பொறுப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாக, சர்வதேச விதிமுறைகளுடனும் பிராந்திய ஒருமைப்பாட்டுடனும் இருக்கும் என்று இந்தியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ‘த இந்து’ பத்திரிகைக்கு டெல்லி உயர் அதிகாரி ஒருவர் இலங்கையின் போர்ட் சிட்டி திட்டம் தொடர்பான இந்தியாவின் அவதானத்தை தெரிவித்துள்ளதோடு, அவரது பெயர் வெளியிடப்படவில்லை.