May 15, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கையில் புகை பிடிப்பவரிடையே ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் கொரோனா தொற்று பரவலுடன் நாட்டில் புகைபிடிப்பவர்களில் 48 சதவீதமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளதாக மதுபானங்கள் மற்றும் போதை பொருள் தொடர்பான தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியுள்ளவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் மீண்டும் ஒருபோதும் புகை பிடிக்க மாட்டார்கள் என்றும் மதுபானங்கள் மற்றும் போதை பொருள் தொடர்பான தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

புகை பிடிப்பவர்களிடையே கொரோனா தொற்றுக்கு நேரடியாக தாக்கம் செலுத்துவதுடன், அவர்களின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவும் மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள் தொடர்பான தகவல் மையத்தின் பணிப்பாளர் சம்பத் த சரம் தெரிவித்தார்.

இலங்கையில் புகை பிடிப்பதால் தினமும் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழக்கின்றார்கள் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் கூறியுள்ளார்.

ஒருவர் புகை பிடிப்பதை நிறுத்தி விடுவது அவரின் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்கான ஒரு வாய்ப்பு எனவும் சம்பத் த சரம் தெரிவித்தார்.

புகை பிடிக்கும் பழக்கத்தை குறைப்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இலங்கை செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் புகை பிடிக்கும் பழக்கத்தை நாட்டிலிருந்து முற்றாக நீக்க மேலும் பல கொள்கைகளை செயல்படுத்த வேண்டி உள்ளது என்றார்.

புள்ளி விபரங்களின் படி கடந்த 10 ஆண்டுகளில் புகை பிடித்தல் 40-50 சதவீதம் குறைந்துள்ளதுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 12 சதவீதம் குறைந்துள்ளது.

இதனை மேலும் குறைப்பதற்கு சிகரெட்களை தனியாக விற்பனை செய்வதை தடுப்பது, மேலும், கல்வி நிறுவனங்களுக்கு 100 மீட்டர் சுற்று வட்டாரத்தில் சிகரெட் விற்பனையை தடை செய்வது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது முதல் பல தடவைகள் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் அதிகமான காலம் வீட்டில் இருக்க வேண்டி ஏற்பட்டது.

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கும் பலர் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறு தேவையற்ற செலவுகள் மற்றும் உடல் நலத்தை கெடுக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு நாடு முன்னேற்றம் கண்டுள்ளமை கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றமே ஆகும்!