July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா; பொது மக்களின் ஒத்துழைப்பை கோரும் அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் வெள்ளிக்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனையின்படி யாழில் 27 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும்,யாழ்.மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானோர் 2729 ஆக பதிவாகியுள்ள அதேவேளை, தற்போது வரை 36 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனா நிலைவரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக நான்கு கிராமங்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கின்றோம். அந்த வகையில் தெல்லிப்பழை பிரதேச பிரிவில் பலாலி வடக்கு அன்ரனி புரம் கிராமம், அதேபோல் தையிட்டி கிராமம்,காரைநகரில் ஜே-47 கிராம சேவகர் பிரிவு,தற்போது நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே-103 அரசடி கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரப் பகுதியினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நான்கு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே 80 மில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் இவ்வாரம் 11 மில்லியன் பெறுமதியான உணவு பொருட்களுக்கான நிதி கோரி விண்ணப்பித்து இருக்கின்றோம்.

மேலும், நடமாடும் விற்பனை நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு அனைத்து கிராமங்களிலும் உணவு பொருட்கள் விநியோகிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் செயற்பாடுகளை பிரதேச செயலர்கள்,கிராம சேவகர்கள் முன்னெடுத்துள்ளனர்.அத்தோடு வாகன உரிமையாளர்கள் மற்றும் அந்த வாகனத்தில் பயணிப்போர் போன்ற விபரங்களை பிரதேச செயலர் ஊடாக விண்ணப்பித்து அதனை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், பொதுமக்கள் தமது அத்தியாவசிய சேவைகளை வீடுகளிலிருந்து பெற்றுக் கொள்ள கூடியதாக இந்த செயற்பாடானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன்,பேக்கரி பொருட்கள் நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் உணவுப் பொருட்களும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கக்கூடியவாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை தவிர,வைத்தியசாலை செல்வோர், விமான நிலையங்களுக்கு செல்வோர் போன்றவர்களுக்கு மாத்திரம் பயணத்தடை அனுமதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகின்றது.

ஏனையோருக்கான அனுமதி வழங்கப்படவில்லை.எனவே பொதுமக்கள் ஏனைய விடயங்கள் தொடர்பில் அனுமதிக்காக விண்ணப்பிக்க வேண்டாம்.

இந்த நிலைமையில் சகல பொதுமக்களும் பொறுமையாக பயண தடையினை அனுசரித்து பயணத் தடை காலத்தில் வீடுகளிலிருந்து தேவையற்ற விதத்தில் நடமாடாது செயற்படுதல் வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளையும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி செயற்படுவது மிக அவசியமாகும்.

இந்த அபாயமான நிலைமையினை கடந்து செல்வதற்கு அனைவரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.எனவே பொதுமக்கள் இந்த அசௌகரியமான நிலையை அனுசரித்து சற்று பொறுமையாக செயற்படுவதன் மூலம் எமது பிரதேசத்தினை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்

மேலும், யாழில் கொரோனா இடைக்கால சிகிச்சை நிலையங்களை பொறுத்தவரையில் கோப்பாய் அதேபோன்று வட்டுக்கோட்டை சிகிச்சை நிலையங்கள் கொரோனா இடைக்கால பராமரிப்பு நிலையங்களாக செயற்படுகின்றன.கோப்பாயில் 229 க்கும் மேற்பட்டோரும் வட்டுக்கோட்டையில் 199 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எனவே அவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்கள் சுகாதார பிரிவினரால் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு வெகு விரைவில் நாவற்குழி இடைக்கால சிகிச்சை நிலையம் செயற்படத் தொடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.