![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/E2YNYxWX0AIOlyf.jpg?fit=1024%2C461&ssl=1)
‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் இலங்கை கடற்பரப்பில் நுழைய அனுமதிக்கப்பட்ட போது கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து எந்தவொரு தகவலும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்று நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை, சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கப்பல் 20 ஆம் திகதி நள்ளிரவு இலங்கை கடற்பரப்பிற்குள் வந்துள்ளது நிலையில், அதற்கு 12 மணி நேரத்திற்குப் பின்னரே தீ விபத்து ஏற்பட்டதாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அன்று நண்பல் 12 மணியளவில் அனுப்பப்பட்ட இரண்டாவது மின்னஞ்சலில் அவசரநிலை இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் அவசர நிலையை அறிவித்து உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி கப்பல் தீ விபத்துக்குள்ளானமை தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு அறிவிக்கப்படாமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாதினால் இலங்கையின் கடல் வளங்களுக்கு மற்றும் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு கப்பலின் உரிமை நிறுவனமே பொறுப்பு கூறவேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.