July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொடுப்பனவுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர்கள்!

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தினால் முதியோருக்கு வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு இன்றும் நாளையும் தபால் நிலையங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன.

இதற்காக நாட்டிலுள்ள தபாலகங்களும், உப தபாலகங்களும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை திறக்கப்பட்டிருக்கும் என்று தபால்மா அதிபர் அறிவித்திருந்தார்.

இதன்படி மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தபால் நிலையங்களில் பெருமளவான முதியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்ககான பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

மேற்படி கொடுப்பனவுகளை பெறவேண்டியவர்கள், தமது ஓய்வூதிய அடையாள அட்டை, விவசாயம், மீனவர் ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் மற்றும் பொதுசன கொடுப்பனவுகளுக்காக வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி தபாலகங்களுக்கு வரமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமக்கான உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி இன்று காலை முதல் முதியவர்கள் நீண்ட வரிசையில் நின்றதுடன், பொலிஸாரும் அவர்களுக்கான பாதுகாப்பில் ஈடுபட்டனர்.