July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் 19 : மாலைதீவிலிருந்து இலங்கை வந்திருந்தவருக்கு 4 மாதங்களின் பின் தொற்று உறுதி

நான்கு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்திருந்த இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் மலைதீவில் இருந்து வந்திருந்த இவர் தனிமைப்படுத்தலை முறையாக பூர்த்தி செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் இவருக்கு தொற்று இல்லையென்று உறுதி செய்யப்பட்டிருந்தாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் அவர் வெளிநாட்டுக்கு செல்ல தயாரான போது செய்யப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பதாக நேற்றைய தினம் உறுதியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இரத்தினபுரி – கஹவத்தை பிரதேசத்தில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணிய பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவருக்கு அண்மைக் காலத்தில் நாட்டுக்குள் இருந்தே இந்த தொற்று ஏற்பட்டதா? இல்லையேல் ஏற்கனவே வெளிநாட்டில் இருந்து வரும் போதே தொற்றுடன் வந்திருந்தாரா? என்று மருத்துவர்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக சுகாதார துறையினர் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இது வரையில் 5036 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 1500 பேருக்கும் அதிகமானவர்கள் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பரவிய தொற்றுடன் தொடர்புடையவர்களாகும்.