
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, யாழ் குடாநாட்டிலும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்.பொலிஸாரும் இலங்கை விமானப் படையினரும் இணைந்து ட்ரோன் கமரா உதவியுடன் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது, அத்தியாவசிய சேவை தவிர்த்து வீதியில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று (26)காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கமரா கண்காணிப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்.குடாநாட்டின் முக்கிய வீதிகளில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பொலிஸ் அணி வீதியில் பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு, அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போரை எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்கு அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.