July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வரும் பயணிகளுக்கான தடை ஜுன் 1 முதல் நீக்கம்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான தற்காலிக தடையை ஜூன் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா சென்று வந்தவர்களுக்கும் இந்திய பயணிகளுக்கும் தொடர்ந்து பயணத்தடை அமுலில் இருக்கும் என இலங்கையின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளுக்கும் தடை விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் ஆராய்ந்த அரசாங்கம் அந்தத் தடையை முன்னர் அறிவித்ததை போன்று மே 31 நள்ளிரவு வரையில் தொடர்வதற்கும், அதன்பின்னர் தடையை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.

இலங்கைவரும் ஒரு விமானத்தில் மொத்த பயணிகளின் எண்ணிக்கை 75க்கும் மேற்பட்டாது இருக்க வேண்டும் எனவும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட வேண்டும் எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு நாட்டுக்கு வரும் அணைத்து பயணிகளும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கு அமைய தமது சொந்த செலவில் 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இலங்கை வரும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவதற்கு முன்னர் முறையாக சுற்றுலாத் துறையின் அனுமதியை  பெற்றிருக்க வேண்டும் எனவும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.