July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வட மாகாணத்துக்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசி தேவை’

வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்கு செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸ் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் முதலாவது டோஸைப் பெற்ற 500 பேர் வரையில் இரண்டாவது டோஸைப் பெறவில்லை. அவர்களில் பலர் தமக்கு தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்து வருவதால், அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் காலாவதியாவதால் அதனை திருப்பி கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைமை காணப்படுகின்றதன் காரணமாகவே முதலாவது டோஸ் பெற்று இரண்டாவது டோஸை பெறாதவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.