
இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளின் நுழைவை பஹ்ரைன் மே 24 ஆம் திகதி முதல் நிறுத்தி வைத்துள்ளதாக அந் நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர்கள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்பதுடன், பஹ்ரைன் வந்தடைந்ததும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பஹ்ரைன் நாட்டின் குடிமக்கள் மற்றும் வதிவிட விசா வைத்திருப்பவர்கள் தங்கள் இல்லத்தில் அல்லது தேசிய சுகாதார ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற தனிமைப்படுத்தப்பட்ட வசதியில் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு பஹ்ரைன் அரசாங்க செயற்குழு உத்தரவுகளுக்கு இணங்கவும், சிவில் விமான போக்குவரத்து விவகாரங்களான கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கான தேசிய மருத்துவ பணிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.