July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களால் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிக்கிறது’: ஜேவிபி குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கம் கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

போர்ட் சிட்டி சட்டமூலத்துக்கு எதிராக தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார ஒழுங்கு விதிகளைப் பேணி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகவும் ஜேவிபி தெரிவித்துள்ளது.

‘பொலிஸாரின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியை பயப்படச் செய்து, அரசாங்கத்தின் குறைகளை மறைப்பதாகும்’ என்றும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.