
நாள்தோறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உச்சமடைந்ததற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் தான் காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசு கூறும் புத்தாண்டு கொரோனா கொத்தணிக்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல. அரசுதான் முழுப்பொறுப்பு.தமிழ் – சிங்களப் புத்தாண்டுடன் நாட்டை குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது அரசு முழுமையாக முடக்கியிருந்தால் இந்த பேராபத்தை மக்கள் சந்திக்க வேண்டி வந்திருக்க மாட்டாது.
கொரோனா தொற்று அசுர வேகத்தில் அதிகரிக்க ஆரம்பித்தபோது அது தொடர்பில் துளியளவும் கவனம் செலுத்தாத அரசு,கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்குடனே செயற்பட்டது. அதில் தற்போது அரசு வெற்றியும் கண்டுள்ளது. ஆனால், நாடோ பேராபத்தில் சிக்கியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.