February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக்கு அடுத்து வரும் வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை”: அரச மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் தினசரி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் நிலைமை கட்டுக்குள் வந்துவிடுமென்று கூறிக்கொண்டு இருந்துவிட முடியாது என்றும்,  அவ்வாறு செய்தால் நாடு தானாகவே பேரழிவிற்குள் தள்ளப்படும் என்றும் அந்த சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடுத்த கொத்தணி எங்கிருந்து தோன்றும் என்று தெரியாது எனவும், இதனால் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுகாதார அதிகாரிகளால் மட்டுமே நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் பொதுமக்கள் தங்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.