July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பலஸ்தீனம் மீதான திட்டமிட்ட இன அழிப்பை நிறுத்தவேண்டும் என்கிறார் சஜித் .

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இரு இராச்சியங்களாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய கிழக்கில் உருவாகியுள்ள அதிகார போராட்டத்திற்கு தீர்வு காணப்படவேண்டும். அதேபோல் பலஸ்தீனம் மீதான திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இஸ்ரேல் – பலஸ்தீன் விவகாரம் குறித்து சபையில் பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

காஸா பகுதியில் இஸ்ரேல் – பலஸ்தீன மோதலின் காரணமாக பலஸ்தீன் பகுதியில் பாரிய அளவிலான இன அழிப்பு இடம்பெற்று வருகின்றது. இது உண்மையில் ஒரு இன அழிப்பாகும். இந்த பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வு இரு இராச்சிய உருவாக்கமாகும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இரு இராச்சியங்களாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய கிழக்கில் உருவாகியுள்ள அதிகார போராட்டத்திற்கு தீர்வு காணப்படவேண்டும்.

அதேபோல் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக நாம் குரல் கொடுக்கின்றோம்.அதுமட்டுமல்ல ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பையும் மறந்துவிடக்கூடாது.அதனையும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.

எனவே இப்போதுள்ள நிலையில் இரு நாடுகள் உருவாக்கப்பட்டு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.அதேபோல் பலஸ்தீன் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இன அழிப்பை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களுக்காக குரல் கொடுக்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.