July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் எனக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுங்கள்’; ரிஷாத் எம்.பி.தெரிவிப்பு

பயங்கரவாத செயற்பாடுகளுடன் நான் தொடர்புபட்டவன் என்றோ அல்லது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவன் என்றோ ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியுமென்றால் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து எனக்கு தூக்குத்தண்டனை பெற்றுக்கொடுங்கள். ஆனால் நான் செய்யாத குற்றத்திற்காக என்னை தடுப்பு காவலில் வைத்திருந்து பழிவாங்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் சபையில் தெரிவித்தார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி,எந்தவொரு நீதிமன்றத்திற்கும் என்னை அழைத்து செல்லாது, சட்டமா அதிபர் திணைக்களத்தில் கூட என்னை பற்றிய கேள்விகளை கேட்காமல் நடுச்சாமத்தில் நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது ஒன்றரை மணியளவில் எனது வீட்டுக்குள் புகுந்து, அதுவும் மதிலுக்கு மேலால் பாய்ந்து சில பொலிசார் உள்ளே புகுந்து என்னை கைது செய்து அழைத்து சென்றார்கள். என்னை கைது செய்வதற்கான எந்தவித காரணத்தையும் கூறாது என்னை அழைத்து சென்றார்கள்.

மக்கள் வாக்குகளின் மூலமாக பாராளுமன்ற பிரதிநிதியாக 20 ஆண்டுகளாக செயற்படும் என்னை எந்தவொரு குற்றமும் சுமத்தாது கைது செய்து மூன்று மாதங்கள் தடுப்புக்காவலில் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேட்கின்றேன்.

நான் தவறு செய்திருந்தால் நீதிமன்றத்தின் முன்னால் என்னை கொண்டு செல்ல வேண்டும், அல்லது என்னை கைது செய்ய முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.இது எதனையும் செய்யாது 22 நாட்கள் என்னை நான்காம் மாடியில் தடுத்து வைத்துள்ளனர். எனது அமைச்சின் செயலாளர் பெயர் என்ன, மேலதிக செயலாளர் பெயர் என்ன, அவர்களுடன் தொலைபேசியில் நீங்கள் பேசுவீர்களா என இவ்வாறான கேள்விகளே கேட்டுக்கொண்டுள்ளனர். என்னைப்போல் ஜனநாயக தலைவர்களை அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்துள்ளனர்.இதனை கண்டிக்கும் சிவில் பிரதிநிதிகள், மக்கள் அனைவரிடம் கேட்டுக்கொள்வது ஒன்றுதான், என் மீதான இவ்வாறான அடக்குமுறை நியாயமானதா என ஜனாதிபதியிடம் கேளுங்கள் எனவும் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட எந்த விடயத்தில் நான் தொடர்புபட்டுள்ளேன் என சட்டமா அதிபர் திணைக்களம் கூறவும் இல்லை, என்னை கைது செய்ய அவர்கள் வலியுறுத்தவும் இல்லை. அவ்வாறு இருக்கையில் யாரோ ஒரு மதகுருவை திருப்திப்படுத்துவதற்காக என்னை 22 நாட்களாக தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். இன்றுவரை என்னுடன் தொடர்புபட்ட விடயங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவில்லை.என்னை நீதிமன்றத்தின் முன் நிறுத்தவுமில்லை. இது என்ன ஜனநாயகம் என நான் கேட்கின்றேன்.

சிறுபான்மை தலைமையை இவ்வாறு அடக்குவதனால் சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கம் கூறும் செய்தி என்ன? எனவே ஜனாதிபதியிடம் நாம் கேட்பது ஒன்று மட்டுமே.நான் ஏதேனும் குற்றம் செய்தால் அதனை வெளிப்படுத்தி என்னை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும். நான் குற்றம் செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை வழங்குங்கள். ஆனால் எனக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளுடன் நான் தொடர்புபடவில்லை என பொலிஸ்மா அதிபர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். தெரிவுக்குழுவிலும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே என்னை பழிவாங்க வேண்டாம்.