July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிகிச்சை மையங்களில் கடும் இட நெருக்கடி; புதிய நோயாளர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாத அவலம்

நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் ஏராளமானோர் தற்போது சிகிச்சை மையங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கேகாலை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், நாட்பட்ட நோய்களைக் கொண்ட வயோதிப பெண் ஒருவரை “60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிக்க முடியாது” என தெரிவித்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த சில நாட்களில், பல சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் புதிய தொற்றாளர்களை அனுமதிப்பதில் நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொரோனா தொற்று அறிகுறிகள் உடையவர்களை அல்லது தொற்றுடன் வீடுகளில் இருப்பவர்களுக்கு இவ்வாறான அவசர நிலைமை தோன்றினால் தாமதமின்றி பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துக்கு தெரிவிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் ஊழியர்கள் தொடர்பான கொரோனா விதிமுறைகளை  திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆடை தொழிற்சாலைகள் இயங்குவதால், ஊழியர்கள் மூலம் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கட்டுநாயக்க – பியகம தொழில் பேட்டைகளில் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதாகவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.