June 14, 2025 10:03:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் நூறு நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டலாம்’; சுகாதார பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கொரோனா நோயாளர்கள் பதிவாகின்றதை அவதானிக்கையில், 100 நாட்களை அடையும்போது, தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை விடவும் அதிகரிக்கக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சாதாரண கணக்கெடுப்பின்படி, ஐந்து, ஆறு தினங்களுக்கிடையே, ஒரு நபர், இரண்டு நபர்களுக்கு தொற்றை ஏற்படுத்துவராயின், ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒருமுறையும், நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும்.

அவ்வாறு ஏற்பட்டால், 100 நாட்கள் என்ற காலம் நிறைவடையும்போது, 20 தடவைகளுக்கு இந்த எண்ணிக்கை இருமடங்கானால், நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் பதிவாகக்கூடும்.

எனவே, கொரோனா வைரஸினால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு உரிய சிகிச்சையினை பெற்று கொள்வதற்கும், சுகாதார வழிகாட்டல்களை தவறாது பின்பற்றுவதற்கும் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.