July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்து பண்பாட்டு நிதியத்திற்கு பிரதமரினால் உறுப்பினர்கள் நியமனம்

இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ நியமித்துள்ளார்.

எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந் நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபை தலைவர் பெ.சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் திரு. ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான தேசமான்ய துரைச்சாமி விக்னேஸ்வரன், ஏ.பி.ஜெயராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ,

இந்த நாட்டில் நாம் பௌத்த தர்மத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, ஏனைய மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். இந்து மக்கள், இஸ்லாம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் என அனைவரும் தத்தம் மதங்களை பின்பற்றுவதற்கும், அவரவர் மத அனுட்டானங்களை பின்பற்றுவதற்கும் இந்நாட்டில் எவ்வித தடையும் இல்லை. அதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பின் ஊடாக எமது நாட்டில் மத நல்லிணக்கத்துடன் கூடிய சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்துப் பண்பாட்டு நிதியம் தனது இலக்கினை அடைவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டியது அவசியமாகும்.

இந்து அறநெறி பாடசாலைகளின் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தி, ஆன்மீக ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் சிறந்த இளம் தலைமுறையை உருவாக்குவதற்கு செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களின் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி நாடு முழுவதுமுள்ள இந்து ஆலயங்களின் தேவைகளை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்து பண்பாட்டு நிதிய உறுப்பினர்களிடம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வலியுறுத்தினார்.

இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31 ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.