July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஈஸ்டர் தாக்குதல்; சட்டமா அதிபரின் கருத்து குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும்’: எதிர்க்கட்சி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தாமதப்படுத்தும் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எந்த ஒருவருக்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய சாட்சியங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் மறைமுகமாகக் கூறியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னறிவிப்பு கிடைத்தும், அதனை யாருக்கும் வெளிப்படுத்தவில்லை என்று ஜனாதிபதி அறிக்கையில் காணப்படுவதாகவும், அது தெளிவான சாட்சியமில்லையா? என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பல்வேறு சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதை சிறு பிள்ளைகளும் விளங்கிக்கொள்வார்கள் என்று கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வுப் பிரிவின் அனைவரும் சம்பவத்தில் தொடர்புபட்டதாக தான் கூறவில்லை என்றும் 90 வீதமானோர் குற்றமற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.