June 13, 2025 14:22:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ரிஷாட் பதியுதீனுக்கு அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விரும்பினால் அடுத்த வாரம் முதல் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சபாநாயகரின் அறிவித்தலுக்கு அமைய ரிஷாட் பதியுதீனால் கோரிக்கை விடுக்கப்பட்டால் மட்டுமே அவரை பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைத்து வர நடவடிக்கைகளை எடுக்குமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு, ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு அழைத்து வரும்போது அரசாங்கம் விதித்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே சிறையில் இருக்கும் இரத்தினபுரி மாவட்ட எம்.பி. பிரேமலால் ஜயசேகரவையும் அவர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறு பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ சிறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.