July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பிரச்சினைகள் ஏற்படும்’; பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாத நோயாளர்கள் நாளை முதல் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவர் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்திருந்தார்.

இவ்வாறு வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் கொரோனா கட்டுப்பட்டு நிலையத்தினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கு போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை முன்வைக்கப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் தமது தரப்பிலிருந்து சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

குறிப்பாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.

அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படுவதோடு, தொடர்ந்தும் பழைய வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.

இதேவேளை, வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றவர்களுக்கு, அவசர தேவைகளுக்கு வழங்குவதற்கான போதிய மருந்து பொருட்களும் வைத்திய அதிகாரி அலுவலகங்களில் இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிப்பதற்கான வேலைத்திட்டத்தை கொவிட்-19 தேசிய செயலணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.