February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ‘கொவிட் தொற்றை’ அரசாங்கம் பயன்படுத்துகிறது; எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

அரசியல் தேவைகளை நிறைவேற்றவும் நெருங்கிய நண்பர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் கொவிட் தொற்றை பயன்படுத்தும் அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற செயலை கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

புத்தியை முதலில் இழந்தால், அழிவு இரண்டாவதாக பின்தொடரும் என்று ஒரு பழமொழி உண்டு.அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்குமிடத்து இதைத்தான் இன்று அரசாங்கம் செய்து வருகிறது.கொவிட் தொற்று நோயின் கட்டுப்பாட்டை அரசாங்கம் இழந்துவிட்டது.

நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை இப்போது கிட்டத்தட்ட 30 கும் மேலாக உயர்ந்துள்ளது.இன்று அரசாங்கம் மிகத் துல்லியமான தகவல்களைக் கூட மறைத்து வருகிறது.இது மிகப் பெரிய சோகமான நிலையாகும்.

அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப கொரோனா தொற்றுநோயை தொடர்ந்து பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம்.கொவிட் முதலாம் அலையின் போது அதன் தாக்கம் குறித்து அரசாங்கம் கவலைப்படாமல் பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுக்களுக்கு அழைப்பு விடுத்தது. அந்த நேரத்தில் செயல்பட்டில் இருந்த தேர்தல் ஆணைக்குழுவின் தலையீட்டால் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுத்திய போதிலும், நாட்டில் ஆபத்து குறித்து எந்த கவலையும் இல்லாமல்,நிலைமை அமைதியடைவதற்கு முன்னர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொற்று நோயின் இரண்டாவது அலை குறித்த அவதானங்களை சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியிருந்தபோதிலும், அதற்குரிய முன்னாயத்தமில்லாத அரசாங்கம் 20 ஆம் திருத்தத்தை நிறைவேற்ற விரும்பியது.கொவிட்டின் இரண்டாவது அலையை மறந்து, மூன்றாவது அலையின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அரசாங்கம் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தது.

உருமாறிய வைரஸ் பரவலுக்குரிய அவதானம் நாட்டிற்குள்ளதாக சுகாதார தரப்பு எச்சரித்த போதும்,கொடிய உருமாறிய வைரஸ் பிறழ்வு பரவாமல் தடுப்பதற்கான ஒரு தனிமைப்படுத்தல் மையமாக நம் நாட்டை திறக்கவும் அரசாங்கம் உக்ரைனியர்களுக்கு அழைப்பு விடுத்தது மாத்திரமல்லாது, இந்த நேரத்தில் இந்தியர்களை தனிமைப்படுத்தும் மையமாகவும் மாற்றியுள்ளது.இதன் விளைவுகளையே இன்று அநுபவிக்கிறோம்.அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அல்ல என்பது இதுலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.

நாட்டின் இறையாண்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் போர்ட் சிட்டி சட்டத்தை நிறைவேற்றுவதை விரைவுபடுத்துவதற்காக இந்த மாதம் 19/20 ஆகிய தினங்களில் நாடாளுமன்றத்தை கூட்டுகிறது என்பதிலிருந்து இது தெளிவாகிறது. கொவிட் மீது தடுப்பூசி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவே அரசாங்கம் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காகவே,என்றாலும் அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் இந்த விடயம் இடம்பெறாமை நாட்டின் துரதிஷ்டமே.

அரசியல் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அதன் நட்பு வட்டார பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் கொவிட் பரவலை பயன்படுத்துவதை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டாம் என்று சகல எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விடுத்த கோரிக்கையை நிராகரித்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடத்தையை நாங்கள் கண்டிக்கிறோம்.

கொவிட் தொற்றுநோயின் மூன்றாவது அலை நாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் தருணத்தில், எதிர்க்கட்சிகளின் கருத்துகளைப் புறக்கணித்து ஒரு சர்வாதிகாரி போல செயல்படும் அரசாங்கத்தின் இந்தச் செயலை ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.