![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/05/11.jpg?fit=550%2C364&ssl=1)
இலங்கையில் மே 13 முதல் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு பேர் உயிரிழதுள்ளதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின் சில 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில், நாடளாவிய ரீதியில் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 42,252 பேர் வரை வெள்ளம், மண்சரிவு, புயல் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு கொழும்பு மாவட்டத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 1,620 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
மேலும், காலி மாவட்டத்தில் 1,228 குடும்பங்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,385 குடும்பங்களும், மாத்தறை மாவட்டத்தில் 663 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென்கிழக்கு அரேபிய கடற்பரப்புகளில் உருவாகிய தாழமுக்கத்தினால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் நாளை முதல் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் தென்கிழக்கு அரேபிய கடல் பகுதியில் (05N-17N, 65E-75E) காற்றின் வேகம் (70-80) கி.மீ வேகத்தில் அதிகரிக்கக்கூடும்.
மறு அறிவித்தல் வரும் வரை தென்கிழக்கு அரேபிய கடல் பகுதிக்கு (05N-17N, 65E-75E) செல்ல வேண்டாம் என்று கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.