May 29, 2025 1:00:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலியை வீட்டில் இருந்து நடத்துவோம்” என்கிறார் மாவை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டு சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மிக அவதானமாக நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

மே 18 நாளை போரில் உயிரிழந்த மக்கள் நினைவு நாளாக உறவுகள் அனுசரித்து வருகிறார்கள்.முள்ளிவாய்க்காலில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் ஒரு நினைவிடத்தை தயார் செய்து மே மாதம் 18 ஆம் திகதி அந்த நினைவு நாளை உறவுகளை பறி கொடுத்தவர்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இம்முறையும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டு வந்த அதேவேளை, ஒரு நிரந்தரமான நடுகல் ஒன்றும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடுவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

ஆனால் கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் அந்தப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த நினைவு சின்னத்தை சிதைத்துள்ளதுடன்,அங்கு வைக்கப்பட்டிருந்த நடுகலையும் திருடி சென்றுள்ளனர்.தற்போது எங்கே அது இருக்கின்றது என தெரியவில்லை

எனினும் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தற்போதுள்ள கொரோனா நிலைமையினை அனுசரித்து சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு மிக அவதானமாக அதனை செயற்படுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எனவே இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வழமை போன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு நினைவு கூருவோம். அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர ஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளமை தமிழ் தேச மக்களுக்கு ஒரு எழுச்சிமிக்கதாக காணப்படுகின்றது. எனவே தற்போதுள்ள நிலைமையை அனுசரித்து முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை நடத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.