October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை விமானப் படையினரால் புதிய “வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை தொகுதி” அறிமுகம்!

கொவிட் 19 தொற்று நோய் நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை தொகுதி (HEATED HUMIDIFIED OXYGEN THERAPY) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது இந்த தொகுதியின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.

புத்தாக்க துறையில் சர்வதேச தூதுவரான வித்யாஜோதி, கலாநிதி பந்துல விஜே அவர்களின் எண்ணக்கருவில் பேராசிரியர் ரணில் டி சில்வா மற்றும் வைத்தியர் திலங்க ரத்னபால உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த உபகரண தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொரோனா சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இந்த ஒக்ஸிஜன் கருவி பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த சாதனம் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை ஒட்சிசனை முழு ஈரப்பதத்தில் வழங்குகிறது.

விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவின் வழிகாட்டுதலின் பேரில், விமானப்படை கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பிரசன்ன மார்டினோவின் மேற்பார்வையில் விமானப்படையின் பொறியியல் பிரிவின் விமான பராமரிப்பு பிரிவினால் தயாரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வரையறைகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயல்திறன் தரங்களை சரிபார்த்த பிறகு, இது இலங்கை தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மொரட்டுவை பல்கலைக்கழகம் இதன் மின் பாதுகாப்பு தரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சாதனத்தை உற்பத்தி செய்வதற்காக 15 லட்சம் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்த போதிலும் 300,000 லட்சம் ரூபா என்ற குறைந்த செலவில் உற்பத்தி நடவடிக்கைகள் நிறைவு பெற்றிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 50 உபகரண தொகுதிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப தொடர்ச்சியாக உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.