July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உள்நாட்டு ஐஎஸ்ஐஎஸ் முகவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையில் ஐஸ்ஐஎஸ் அமைப்பின் முகவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் சில நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், ஈஸ்டர் தாக்குதலைப் போன்ற பேரழிவுகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் என்பது ஒரு கருத்தியல் என்றும் சாதாரண இஸ்லாமிய நம்பிக்கையாளரையும் அடிப்படைவாதிகளையும் வேறு பிரித்து அறிவது சிரமம் என்றும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஆலோசனைகளை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.