October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் கைது

யாழ்.மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட அனைவருக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியை பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதனடிப்படையில் யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை புதன்கிழமை யாழ்.மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள்,வியாபார நிலையங்களுக்குள் சென்ற பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேரை கைது செய்து பேருந்தில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் 50 பேருக்கும் எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட அதேவேளை,
குற்றஞ் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 21,22 ஆம் திகதிகளில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படும் என்று பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.