July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த சிக்கலும் இல்லை’; மகப்பேறு வைத்தியர்

கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த சிக்கலும் இல்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு வைத்திய சங்கத் தலைவர் வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
பிரிட்டனில் உள்ள மருத்து  நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு அமைய, தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு  இதுவரை எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது நிலவும் அபாயகரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கூடிய விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, கர்ப்பிணித் தாய்மார்கள், கர்ப்பம் தரிக்க எதிர்பார்த்துள்ள பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது பொருத்தமானது என வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் கர்ப்பம் காரணமாகக் குறுகிய இடைவெளியில் இரண்டு இறப்புகள் நடந்துள்ளன. இது தாய் இறப்பு விகிதத்தில் மிகப்பெரிய அதிகரிப்பாகும். அத்தோடு இது மேலும் அதிகரிக்கக் கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது இதனைத் தடுப்பதற்கான முக்கிய உத்திகளில் ஒன்று என குறிப்பிட்ட அவர்,  கொரோனா தொற்று நோய் பரவல் அதிகம் பதிவாகியுள்ள கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் கண்டி ஆகிய முக்கிய மாவட்டங்களில் தடுப்பூசி திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என வைத்திய சங்கம் பரிந்துரைப்பதாக அவர் மேலும் கூறினார்.