July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டை முடக்குவதா? இல்லையா?: இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்!

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன.

இதன்படி இந்த கூட்டத்தில் அது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டை முழுமையாக முடக்குமாறு ஒரு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வரும் அதேவேளை மற்றுமொரு தரப்பினர் பொருளாதாரத்திற்கு பாதிப்பு இல்லாதவாறு பகுதியளவிலான முடக்கத்தையோ அல்லது மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளையோ அறிவிக்க வேண்டுமென்றுகோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டை முழுமையாகவே அல்லது 75 வீதமான பகுதியையோ முடக்க நடவடிக்கையெடுக்கப்பட்டால் அதற்கு முகம்கொடுக்க தயாராக இருக்குமாறு நேற்று மாலை நடைபெற்ற ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ அத்தியாவசிய சேவைகளுக்கு பொறுப்பான அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.