July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தீவிரம்; அத்தியாவசிய சேவைகள் தயார் நிலையில்!

நாட்டில் கொரோனா நோயாளர்கள் மேலும் அதிகரித்தால் பல பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கு அல்லது நாட்டை பகுதியளவில் முடக்க வேண்டியிருக்கலாம் என்பதனால் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

அத்தியா வசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானி  பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் பணிக்குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டில் காணப்படும் சுகாதார நெருக்கடி குறித்து தீவிரமாக ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கொரோனா நோயாளர்கள் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், இது நாட்டின் சுகாதாரத் துறையினரின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை வெசாக் தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாரம் முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளையும் வீடுகளிலேயே கொண்டாடுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டில் நேற்று கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை என்றுமில்லாதவாறு 2500 ஆக அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.