June 11, 2025 6:23:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் ‘யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்’ அமைப்பு அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றை பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரவுரிமை மையம் என்னும் அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மரவுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியினால் 11 நபர்களை அங்கத்தவர்களாக கொண்ட குறித்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

மாநகர முதல்வரின் தலமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் தலைவராக வரலாற்று துறை பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் யாழ்ப்பாணம் மரவுரிமை மையத்தின் உப தலைவர்களாக வைத்திய கலாநிதி பேராசிரியர் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ் ஆகியோரும் செயலாளராக மருத்துவ பீட் பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ், துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன், பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம், இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன், பதிப்பாசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பொது மக்களின் பங்களிப்புடன் இவ் அமைப்பு வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.