July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நிபுணர்களுடன் கல்வியமைச்சர் ஆலோசனை!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நிபுணர்களுடன் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் நாட்டின் பிரதான வைத்திய நிபுணர்கள், கல்வியியல் நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது, கொரோனா தொற்று அதிகரிப்புடன் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை வாராந்தம் மதிப்பிடப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், கல்வி சார் நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து ஒரு திட்டவட்டமான திகதியை அறிவிக்க முடியாதுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இதனிடையே நாட்டு மக்களின் வருமானம், வாழ்வாதாரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பிற அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.