July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாடு ஆபத்தான நிலையில்’; அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பது அவசியம் என்கிறது அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

புதிய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக நாடு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசாங்கம் சரியான முடிவுகளை எடுப்பது அவசியம் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளதாக சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

இலங்கையில் தரம் வாய்ந்த கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை முடிந்தவரை விஸ்தரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் முன்னைய வைரஸை விடவும் மிகவும் தீவிரமானது.இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு 4 முதல் 5 நாட்களுக்குள் அறிகுறிகள் வெளியாகின்றது. எனவே அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

அத்தோடு, புதிய வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் நுரையீரலை கடுமையாக பாதிப்பதுடன், தீவிரமான நிமோனியாவை ஏற்படுத்துகின்றது.அதனால் குருதி உறைவு ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாக வைத்தியர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டார்.

இந்த கட்டத்தில் நோயாளிக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். அத்தோடு ஒக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சையும் நோயாளிக்கு அவசியமாகின்றது என்றார்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் உள்ள சுகாதார வளங்களை கொண்டு அதிகமானவர்களுக்கு சிகிச்சை வழங்குவது மிகவும் கடினமானது.

எனவே, இதனை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல் ஒவ்வொருவரும் இந்த நிலைமையை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என வைத்தியர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தினார்.