July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் தேங்காய் எண்ணெய்யுடன் வேறு எண்ணெய் வகைகளை சேர்ப்பதை தடை செய்தது இலங்கை

சமையல் வேலைகளுக்குப் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யுடன் வேறு எண்ணெய் வகைகளை சேர்ப்பதை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தடை செய்துள்ளது.

இலங்கையின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் இவ்வாறு தடை செய்து, விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

போத்தல்களில், பொதிகளில் அல்லது கொள்கலன்களில் மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்யப்படும் சமையல் தேங்காய் எண்ணெய், வேறு எண்ணெய் வகைகளின் சேர்க்கை அற்றதாக இருக்க வேண்டும் என்று குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள், கையிருப்பாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சமையல் தேங்காய் எண்ணெய், வேறு எண்ணெய் வகைகளின் சேர்க்கை அற்றதாக இருக்க வேண்டும் என்ற சட்டம் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.